ஆன்டி இண்டியன்
படத்தின் துவக்கத்திலிருந்தே மாறுபட்ட உத்திகளைக் (யதார்த்தம் எனும் உத்தி) கையாண்டிருக்கிறார் இயக்குநர் புளூ சட்டை C.இளமாறன். சின்ன சின்ன வார்த்தைகளுக்காகவும் பின்புறப் படங்களுக்காகவும் பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்ற இன்றைய சூழலில் இது மாதிரியான படம் வெளிவந்திருப்பது அதிர்ச்சி மிகுந்த வரவேற்புதான். ஆம், அந்த அளவிற்கு மதம் பேசப்பட்டிருக்கிறது. மதங்களின் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதத்திற்குள்ளான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இது இருக்கும். ஏனென்றால் இந்தப் படம் பேசிய துணிச்சலான வசனங்களை வேறு படங்கள் பேசவில்லை என்பதுதான் இதற்கான காரணம். தொழில்நுட்பம், இசை, ஒளிப்பதிவு என்று பல கோளாறுகள் இருப்பதாக அறிவு நிபுணர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பிற்கு இவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்தச் சமூகத்திற்குச் சொல்ல நினைத்தவொன்றைச் சமரசம் இல்லாமல் தனது மனத்திற்குப் பிடித்தபடி சொல்லியிருக்கிறோமா? என்பதுதான் பிரதானம்.
இப்படம் ஒரு கொலையில் தொடங்கிப் பல கொலைகளில் முடிகின்ற படம். செதுக்கப்பட்ட வசனங்கள், இயல்பான எள்ளல், நகைச்சுவை, அழுகை என்று படம் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளது. இறுதியில் பிணத்தை இந்துவிடமோ கிறிஸ்தவர்களிடமோ இஸ்லாமியர்களிடமோ ஒப்படைக்க வேண்டும். யாரிடமும் ஒப்படைக்காமல் தெருவில் கிடப்பதாகப் படத்தை நிறைவு செய்திருக்கலாம். அல்லது ஒரு கதாப்பாத்திரம் சொல்வது போல் மெடிக்கல் காலேஜ்ஜிற்குக் கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் யதார்த்தத்திலிருந்து விலகி இப்படம் சராசரி ரகமாகியிருக்கும். ஆனால் இயக்குநர் தனது தீர்வை முன்வைக்கிறார். கிட்டத்தட்ட ஒரு சிறுகதை போல. ஆனித்தரமைான, மிகச் சரியான, எல்லோரும் ஏற்கும்படியான தீர்ப்பை வழங்குகிறார் இயக்குநர்.
கடனுக்கு ஒரு படத்தைச் செய்யாமல் கடமையுணர்வோடு செய்த இயக்குநரையும் அவரது குழுவையும் பொருளுதவி செய்துள்ள தயாரிப்பாளரையும் மனதார பாராட்டலாம்.
0 கருத்துகள்: