முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல் பரத்தையும்

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல்                              பரத்தையும்

பண்டைக் காலத்தில் ஆண், பெண் உறவுமுறையினூடாக நம் முன்னோர்களின் குடும்பப் பின்னனியை ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடிகிறது. திணை அடிப்படையில் நிலத்தினைப் பிரித்து ஒவ்வொரு (குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை) நிலத்திற்கும் ஒவ்வொரு வகையான ஒழுக்கங்களை (பழக்கவழக்கங்கள் என்று ஊகித்துக்கொள்க) சுட்டியுள்ளனர். இவற்றுள் மருதத்திணை ஏனைய திணைகளைக் காட்டிலும் குடும்பப் பின்னனியைச் சார்ந்தது என்று குறிப்பிடலாம். தலைவன்,தலைவி,தோழி மூவரும் முக்கியக் கதாபாத்திரங்கள். இம்மூவருக்குமிடையேதான் பெரும்பாலும் உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. அப்படி உரையாடும் பொழுது வெறும் கருத்தை மட்டுமே கூறுவதாகப் புலவர்கள் பாடலைப் புனையவில்லை. இயற்கையை வருணித்து அதனூடாகத் மாந்தர்களது உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர். அப்படி ஒரு அருமையான குடும்பப் பின்னனியில் அமைந்துள்ள கருத்து வருமாறு:  
  தலைவி கர்ப்பமடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். ஆனால் தலைவன் குழந்தையை ஈன்றுள்ள தனது மனைவியை விட்டு நீங்கி பரத்தையரிடம் சென்று அவளுடன் வாழ்ந்து வருகிறான். இப்படியே பல நாட்கள் கழிந்த பின்பு திடீரென மனைவியும் குழந்தையும் நினைவுக்கு வர மீண்டும் தனது இல்லத்தை நோக்கி வருகிறான். இப்போது தலைவனை நோக்கி தலைவி மெல்லிய கோபத்துடன் பேசுகிறாள்அந்தப் பேச்சு அத்தனை அழகு வாய்ந்தது. கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்..!
         பழனப் பல்மீன் அருந்த நாரை
         கழனி மருதின் சென்னிச் சேக்கும்
         மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
         தூயர் நறியர் நின்பெண்டிர்
         பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே
                   (ஐங்குறுநூறு - 70)
புதுக்கவி வடிவம்                                                                              
எல்லோரும் பயன்படுத்துகின்ற
அழகுமிகு குளம்..
சிறிய குளம் என்றாலும்
அதில் எத்தனை வகை மீன்கள்..
அடடா கண்கொள்ளாக் காட்சி..
அதோ
துள்ளித் திரிந்த
ஏதோ ஒரு வகை மீனை
எங்கிருந்தோ பறந்து வந்த
அந்த நாரை
கொத்தித் தூக்கிக் கொண்டு செல்கிறது..
தூக்கிக் கொண்டு எங்கு சென்றது..?
அதோ
வயல்வரப்பில் வளர்ந்துள்ள
மருத மரத்தின் உச்சிக்கே
கொண்டு சென்றது..
தண்ணீரில் இருந்த மீன் இப்போது
மரத்தின் உச்சியில்..
உயிர் மட்டும் இல்லை அவ்வளவுதான்..
இத்தகைய வளமைக்குக் காரணம்
பெருக்கெடுத்து ஓடுகின்ற நீர்தான்.. 
இப்படி வளமை மிக்க
ஊருக்குச் சொந்தக்காரனே..!
நான் பிள்ளையைப்
பெற்றுவிட்டதால்
உன் கண்களுக்கு இப்போது
நான் பேய் போன்று
தெரிகின்றேன் அல்லவா...?
என்னைவிட உன் பரத்தையரே
தூயவர்
நறுமணம் மிக்கவர்
ஆகையால் நீ
அங்கேயே செல்வாயாக
என் அன்புக் கணவனே..!
உரைவடிவம்
  எல்லோருக்கும் பொதுவான ஒரு நீர்நிலையில் பலவகையான மீன்கள் துள்ளித்திரிந்ததைக் கண்ட நாரை மீன் ஒன்றைக் கவ்விக்கொண்டு மருத மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்று அமர்ந்தது. இத்தகைய வளத்திற்குக் காரணமான நீர்ரிலையை உடைய ஊரனே! நான் குழந்தையைப் பெற்றதால் நான் பேய் போன்று இருப்பதாகக் கருதிப் பரத்தையரை நாடிச் சென்றாய். செல்வாயாக என்னை விட பரத்தையரே தூயவர். நறுமணம் வீசக்கூடியவர்.
பெறக்கூடிய கருத்து
மனைவி  கர்ப்பமடைந்துள்ள காலத்தில் தலைவன் பரத்தையை நாடிச் சென்றுள்ளான்
சென்னி என்றால் தலை, உச்சி என்று பொருள். சென்னிமலை எனும் ஊர் ஈரோடு பகுதியில் உள்ளது. இதற்கு உச்சிமலை என்று பொருள் கொள்ளலாம். இவ்வூர்ப் பெயர் சங்க காலத்தைய சொல்லாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நாரையாகிய தலைவன் பல்வகை மீன்களாகிய பல பரத்தையரோடு உறவுகொண்டு பழனமாகிய அவர்களது இல்லத்தில் வாழ்ந்து வந்தான். மருதமாகிய அவனது சொந்த இல்லத்தை மறந்து விட்டு என்பது இதனுள் பொதிந்து கிடக்கும் பொருள்.

பேய் எனும் நம்பிக்கை சார்ந்த சொல் கையாளப்பெற்றுள்ளது.

கருத்துகள்

  1. தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. பாடலுக்கான விளக்கம் நன்று.
    தொடர்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.. தங்களின் இடுகையே எனக்கு ஊக்கம்...

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழமொழி ஐந்நூறு

                                             பழமொழி 500 அனைவருக்கும்  தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து உதவியவர். ஏ.மேனகா, கணினி-வணிகவியல் துறை மாணவி, கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவி, திருச்செங்கோடு. 1)அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் 2)அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் 3)அடியாத மாடு படியாது 4)அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் 5 )அத்திப் பூத்தாற் போல் 6)அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா? 7)அரசனை நம்பி புருஷனைக் கைவிடலாமா? 8)அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் 9)அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் 10)அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும் 11)அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 12)அறிவே சிறந்த ஆற்றல் 13)அனுபவமே சிறந்த  ஆசான் 14)அன்பே கடவுள் 15)ஆசைக்கு அளவில்லை 16)ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம் 17)ஆணுக்கு ஒரு நீதி.. பெண்...

தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

    தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள்  செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்               - முனைவர் ம.லோகேஸ்வரன்       கொங்குதேர் வாழ்க்கையுடைய அஞ்சிறைத்தும்பியைக் காமம் செப்பாமல் கண்டதைச் சொன்னதிலிருந்து தமிழாய்வு தொடங்கிவிட்டது என்பர். அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் ஒரு தமிழ்ப்படைப்பு வெளியிடப்பெற்றுச் சான்றோர் பலரின் முன்னிலையில் விவாதங்களுக்கு உட்பட்டு கருத்தறிந்து மேற்கொள்ளப்பெற்றுள்ளது. இதற்குத் தொல்காப்பியம் முதலான பண்டை இலக்கியங்கள் தக்கச் சான்றுகளாகும். சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம், உரைச்சிறப்புப் பாயிரம் என்ற வகைப்பாடுகளெல்லாம் பனுவல் மீதான  ◌ாவசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன. வகை தொகைப்படுத்துதல், துறைக்குறிப்பு, கூற்றுக்குறிப்பு, உரையாக்கம் என்கிற வகைப்பாடுகளும் வாசிப்புப் பின்னணியில் நேர்ந்தவைகளேயாகும். ஆகவே ஒரு பனுவலை வாசித்தல் என்கிற பாரம்பரிய முறைமை ககாலத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அஃது இன்றளவில் வாசிப்பு, ஆய்வு என்கிற இருநிலைகளில் வெவ்வேறு பொருள்பட நிற்கின...

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பெற்ற பேராசிரியரின் நூல்கள் முன்னெடுக்கும் ஆய்வு முறையியல் பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் கட்டுரை அளிக்க  வாய்ப்பமைந்தது. வாழ்க்கையில் உண்டான வரலாற்றுத் தருணம்.         நன்றி பேரா சு.தமிழ்வேலு, பேரா.இரா.அறவேந்தன், பேரா.சிலம்பு நா.செல்வராசு)  கட்டுரை கீழ்வருமாறு     தமிழியல் ஆய்வு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தேறியுள்ளன. அவை காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அமைந்தவை. அவ்வகையில் இக்காலத் தமிழியல் ஆய்வு வரலாற்றில் தவிர்க்கவியலா ஆளுமையாகத் திகழ்பவர் சிலம்பு நா.செல்வராசு. இவரது ஆய்வுப் போக்குகள் தனித்தன்மை வாய்ந்தவை. அத்தகைய தன்மைகள் வழியாகத் தமிழியல் ஆய்வு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதும் அடுத்தத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய ஆய்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 1.தமிழாய்வுத்தடம் 1887 ஆம் ஆண்டு சி.வை.தா.வ...