வெள்ளி, 11 மார்ச், 2016

சாயம் போன வீடு

எழுத்தாணி  /  at  மார்ச் 11, 2016  /  No comments

சாயம் போன வீடு

ந்த மஞ்சள் கலர் வீடு
சாம்பல் நிறமாகச் சாயம்போயிருந்தது
வெயிலுக்கு மனிதர்கள்
கறுத்துப் போவார்களே அதைப்போல..
கரகரத்தக் குரலில்
புறாக்கள் முணங்கிக்கொண்டிருந்தன..
வீட்டைச் சுற்றிலும்
காய்ந்து கறுகிப்போன செடிகள்..
மொட்டைமாடியில்
இடுப்பொடிந்த ஆண்டனா ஒன்று..
நூற்றுக்கணக்கான வௌவால்கள்
எதனையோ கேட்டபடித்
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தன..
தேனீக்கள் இல்லாத
வெறும் தேன்கூடு மட்டும்
வீட்டின் நிலைக்கதவு ஓரமாக
ஒட்டிக்கொண்டிருக்கிறது..
வேறு எங்கோ புலம்பெயர்ந்துவிட்டன
இந்த வீட்டு ஆட்களைப் போல
தேனீக்களும்..
நிச்சயமாக வீட்டில் யாருமே இல்லை..
அதற்காக அது பேய்வீடும் இல்லை..
ஒரேயொரு பிச்சசைக்காரன்
தினசரி தனது வசூலைச்
சரிபார்த்துச் செல்கின்றான்..
அன்பு இல்லம் என்பது
அவ்வீட்டின் பெயர்..
ஏழு குடும்பம் ஒன்றாக வாழ்ந்த
சந்தோச வீடாம் இது
என் அபத்தா சொல்லக் கேள்வி...
என் வீட்டின் எதிர்ப்புறமாக
அந்த வீடு
இன்னும் சாயம் போய்க்கொண்டேயிருக்கிறது..
பெருமூச்செறிந்து
கடந்துகொண்டிருக்கிறேன்
வீடுகள் சாயம் போவது 
விருப்பு வெறுப்புகளைச் சகிக்க முடியாத
இருப்பின் கழிவுக்காட்சி..!

Share
Posted in: Posted on: வெள்ளி, 11 மார்ச், 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.