உலகிலிருந்து தற்காலிக விடுவிப்பு
மௌனம் சரணம் - அதிஷா
மனித ஓட்டத்தின் நடுவே சிறு இளைப்பாறல் தேவைப்படுகிறது. அயர்ச்சிகள் மனிதனை ஆற்றாமை இருளுக்குள் தள்ளிவிடுகின்றன. யாருமற்ற வெட்டவெளிகளைத் தேடி ஓடுகிறான். மலையில் நடக்க வேண்டும், பைக்கை எடுத்துக்கொண்டு நெடும்பயணம் செல்ல வேண்டும். leave me alone என்று ஒருமுறையேனும் சொல்லிவிடத் தோன்றுகிறது. கல்விச்சுமை, பணிச்சுமை, குடும்பச்சுமை, உடற்சுமை, மனச்சுமை என்று மனிதன் பிறந்ததிலிருந்து எண்ணற்ற சுமைகளைக் கூடவே வைத்திருக்கிறான். இவற்றைச் சற்று இறக்கிவைக்க வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் இந்த ஓட்டம்? சரியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோமா? இறுதியாக எங்கு, எப்படி நிற்போம்? முதலான கேள்விகளைக் கேட்க சிறு நிழல் தேவைப்படுகிறது. அந்த நிழல் அரவமற்றதாகவும் அடர்த்தியான அமைதிகொண்டதாகவும் இருந்தால் மனது நெருக்கமாகத் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு தன்னைச் சார்ந்தவைகளையும் சுற்றி வரத் தொடங்குகிறது. சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்பும் ஒருவர் செய்ய வேண்டியதுதான் இந்த விபாசனா.
விபாசனா தியான முறையைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. செல்வதற்கும் விரும்பியதுண்டு. ஒருவேளை சென்றால் நாம் பிடித்து வைத்திருக்கும் நம்மை இழந்துவிடுவோமோ? என்கிற அச்சத்திலேயே செல்லாமல் விட்டுவிடுவேன். இந்த எண்ணம் அனைவருக்கும் இருந்திருக்கும் என்பதை அதிஷாவின் வழியாகவே உணர்ந்துகொள்கிறேன். விபாசனா பற்றிய அறிவுறுத்தல் யார் வழியாகவோ எவற்றின் வழியாகவோ உங்களை வந்தடைந்தால் உடனே தயாராகிவிடுங்கள். அதற்கு அதிஷாவின் இந்த நூலை முன்கூட்டியே படித்துவிடுஙகள்.
பத்து நாட்கள் யாரும் யாருடனும் உரையாடக்கூடாது, தனிமையில் தனித்து இருக்க வேண்டும். நேரக்கட்டுப்பாட்டுடன் தியானம் இன்ன பிறவற்றைச் செய்ய வேண்டும் என்கிற வாழ்வியல் மாற்றத்தை ஏற்றுக்கொண்டால் விபாசனா உங்களின் இன்னொரு முகத்தை உங்களுக்கு அடையாளப்படுத்தும் என்பார்கள். மனிதனைக் கடந்து இயற்கையுடனான பரிசுத்த அன்பு, நிதானமான பேச்சு, நிதானமாக முடிவெடுக்கும் தன்மை, உற்றுநோக்கல் முதலான உள்ளொளிகள் வெளிப்படக்கூடும் என்பார்கள். இவற்றை அதிஷா வழியாக உறுதிப்படமுடிகின்றது.
இந்நூலைத் தன்னனுபவமாக எழுதியிருந்தாலும் நாவலுக்கான விறுவிறுப்பும் காட்சிக்கோர்வைகளும் அழகியலும் இந்நூலில் தென்படுகின்றன. அதிஷாவின் ஹியூமர் சென்ஸ் இந்நூலை வாசிக்கத் தூண்டுகிறது. ஒரு ட்ரையான கான்செப்ட்டை இப்படிச் சொன்னால்தான் பலருக்கும் சென்றடையும் என்கிற வாசகநாடியை நன்றாகவே அறிந்திருக்கிறார். எங்காவது அயர்ச்சித் தோன்றுவதுபோல் இருந்தால் தோழியை இறக்கிவிடுகிறார், தவளையை இறக்கிவிடுகிறார். தோழியும் தவளையும் இந்நூலின் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களாக வலம்வருகின்றனர்.
விரட்ட நினைத்த தவளையை அரவணைத்துக்கொள்கிறார். தோழியின் துண்டுச்சீட்டை காதல்கடித்ததைவிட உன்னதமாக்குகிறார். பத்துநாட்கள் கலந்துகொண்ட சகதோழர்களின் பயிற்சிகாலத்து இன்னல்களை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார். காற்றுப்பிரிதல், ஏப்பம், கொட்டாவிகளை ‘அனுபவித்து’ எழுதியுள்ளார்.கோயங்காவை பிக்பாஸாக மாற்றியுள்ளார்.
அதிஷா பத்துநாட்கள் நிறைவுசெய்துவிட்டு நான் மாறிவிட்டேன் என்று தம்பட்டம் அடிக்கவில்லை. நாலு பேருக்குப் போய்ச் சேரட்டும் என்று நினைத்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். முதலில் விபாசனா என்றால் பத்துநாள் யாருடனும் பேசாமல் தியானம் செய்வது என்கிற சிறு புரிதலுடன் அதிஷாவின் இந்த நூலைப் படிக்கத் தொடங்குங்கள். மற்றதை அதிஷாவே நூலில் புட்டு புட்டு வைத்திருக்கிறார். எனக்குச் சந்தேகம் என்னனா ‘ஏம்ப்பா இப்படி எல்லாத்தையும் புக்குல சொல்லிட்டினா நாங்க என்ன பண்றது?’ னு தம்மசேது மையத்திலிருந்து வழக்கு தொடர்ந்துவிடுவார்களோ என்பதுதான். அந்த அளவிற்கு ஏராளமான தகவல்களை, முன்னேற்பாடுகளை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதிஷா நூலில் சொல்லாத ஒன்று இருக்கிறது; அதுதான் அனுபவம். அதை நீங்கள் நேரில் சென்றுதான் அனுபவிக்க வேண்டும்.
ஆசிரியர் - அதிஷா
வெளியீடு - சால்ட் பதிப்பகம்

கருத்துகள்
கருத்துரையிடுக